Sunday, December 28, 2014

பிகேவும் பிசாசும்



வெகு நாட்களுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு படங்கள் - பிகே மற்றும் பிசாசு. இவ்விரண்டு படத்தின் இயக்குநர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும்  திரைக்கதைகளை தம் பிரத்யேக பார்மெட்களில் உருவாக்குபவர்கள். இந்த பார்மெட் அலுக்கும்போதோ அல்லது கதை தன்னளவில் அந்த பார்மெட்டிற்கு ஏற்றதாக இல்லாமலிருக்கும் போதோ தான் சிக்கல் வருகிறது.
முதலில் பிகே.
ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதைகள் இப்படி இருக்கும். நடைமுறையில் நாம் ஒப்புக்கொள்ளும் ஒரு சூழல். வெளியிலிருந்து வரும் நாயகன் அந்த சூழலுக்கு தன்னை ஒப்புக்கொள்ள மறுத்து அந்த சூழலின் அபத்தங்களை கோடிட்டு அதன் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்குகிறான். அதனால் பாதிக்கப்படும் அச்சூழலின் தலைவர்/ பயன்தாரர் எதிர் நாயகன். அவர் நாயகனை வெளியேற்ற அடக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் அதனை நாயகன் முறியடிப்பதும் திரைக்கதையாக பயணிக்கும். பின் ஒர் அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகான உணர்ச்சிகரமான மனமாற்றத்தில் படம் நிறைவடையும்.
ஹிரானி எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்கும் லாவகமே தனி.  வித்தியாசமான ஐடியாக்களின் மூலம் டெமோ காண்பிப்பார் அல்லது எளிய உதாரணங்களின் வழியாக அபத்தங்களை சுட்டிக் காட்டுவார்.
பிகேவும் இதே பார்மெட்டில் முயற்சிக்கப்பட்ட படம்தான்.

இங்கு சூழல், நமது மத நம்பிக்கைகள். அவற்றை கேள்விக்குள்ளாக்குபவர் வேற்றுகிரகவாசி.  அதனால் பாதிக்கப்படுபவர் மதகுரு. அவ்வளவுதான். தமிழில் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா முதல் விவேக் வரை காமெடி ட்ராக்கில் செய்ததை முழு நீள படமாக கொடுத்திருக்கிறார்கள். ஹிந்தி ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது புரட்சிகரமான கருத்தாக இருக்கலாம். நமக்கு பழக்கப்பட்டவை என்றாலும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யமாய் இருப்பதால் தப்பிக்கின்றன.
ஹிரானியின் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் திரைக்கதை முழுக்கவே விரவியிருக்கும் innovative ஐடியாக்கள். முன்னாபாயில் கட்டிப்பிடி வைத்தியம் மற்றும் காந்திகிரி, 3 இடியட்ஸில் பிரசவக்காட்சி, சமத்கார் பேச்சு, வைரஸ் இன்வெர்டர் என பல காட்சிகள். ஆனால் இந்த படத்தில் பணம் மற்றும் உடைகள் எடுக்கும் காட்சியைத் தவிர பெரிதாய் எதுவும் தேறவில்லை.  
அந்த ராங்க் நம்பர் ஐடியாவே ஒரு பெரிய லாஜிக் பொத்தல். பிரச்சினைக்கு அவர்கள் சொல்லும் தீர்வும் சமாளிஃபிகேஷன்ஸ் ஆஃப் இண்டியாவாக இருக்கிறது. க்ளைமாக்சுக்கு முந்தைய ரயில் வெடிகுண்டு காட்சி (முன்னாபாயில் ஜாஹிரின் மரணம் போன்றது) எந்த உணர்வுகளையுமே அளிக்காமல் கடந்து விடுகிறது.
ஆனால் க்ளைமாக்ஸ் எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறது. அதைப் போலவே நெகிழ்வான காட்சிகள் இரண்டு மூன்று உண்டு. கூடவே படமும் போரடிக்காமல் செல்கிறது. வேறு என்ன வேண்டும்? கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் அவரது முந்தைய படங்களை ஒப்பிடுகையில் அவருக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.

அடுத்து பிசாசு
மிஷ்கினின் கதைமாந்தர்கள் உணர்ச்சி கொந்தளிப்புடன் அலைபவர்கள். ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனும் ஒரு உணர்ச்சியை வசனம், பார்வை அல்லது உடல் மொழி மூலமாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவர்கள். காட்சி மொழி என்ற சொற்பிரயோகம் சமகாலத்தில் பரவலாகியதே அவரது படங்களினால் தான். அவரது திரைப்படத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டமுண்டு. ஆனால் வணிக ரீதியிலான் வெற்றியை ருசிக்க அவரது ரசிகர் கூட்டம் போதாது என்பது அனுபவ ரீதியிலான் பாடம். எனவே இந்த முறை அவரது புதிய டார்கெட் ஆடியன்ஸ் - பெண்கள். பொதுவாக மிஷ்கினின் படங்களுக்கு பெண்கள் கூட்டம் இருந்ததில்லை - அஞ்சாதே -விதிவிலக்கு, சித்திரம் பேசுதடி -அவர் படமே அல்ல. காரணம் அதிகமான வன்முறை, நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் இல்லாமை, அதீத உணர்வுகளின் வெளிப்பாடு (மென்சோகம் என்ற பேச்சுக்கே இடமில்லை) . ஆனால் இந்த முறை தனது பிரத்யேகமான காட்சிமொழியினால் வழக்கமான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டதோடல்லாமல் பெண்களை கவரும் அம்சங்களை (உருக்கமான காதல் கதை, அமானுஷ்யம், இடைவேளை வரையிலான ஹாஸ்யங்கள், அம்மா மகன் இயல்பான உறவு, பெண்ணுக்காக உருகும் அப்பா, அநியாயத்தை தட்டிக் கேட்கும் அம்மா, பின் அவருக்கே உதவுவது) கதையில் நுழைத்து அவர்களையும் அரங்கிற்கு அழைப்பதில் வெற்றி கண்டு விட்டார்.
அவரது வழக்கமான படங்களைப் போல ஒரு சாலை விபத்தினை தொடக்கக் காட்சியாய் கொண்டுள்ள இப்படம் அமானுஷ்யம், சஸ்பென்ஸ் த்ரில்லர், காதல் கதை என கலந்து கட்டி அடிக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும்    நாமும் கூட இயக்குநரது கட்டுப்பாட்டில் இருக்கிறோம். தொடக்கக் காட்சியிலேயே க்ளைமாக்ஸுக்கு தேவையான எல்லா குறிப்புகளையையும் கொடுத்து விட்டு கடைசியில் ஒவ்வொன்றாய் சாமர்த்தியமாய் விலக்குகிறார்  நான் தான் முதல்லே சொல்லிட்டேனே என்ற நமட்டுச் சிரிப்புடன்.  
அவரது படங்களிலேயே ஜனரஞ்சகமான படம் இதுதான். வழக்கமாக அவரது கதைமாந்தர்கள் விநோதமானவர்கள், ஒழுங்கற்றவர்கள்.  ஆனால் இந்த படத்தில் அமானுஷ்யம் என்ற ஒற்றை விஷயத்தை தவிர எல்லாமே இயல்பானவை. நாயகனின் வீடு நேர்த்தியாக இருக்கிறது. (ஜேகேவின் அறை நினைவுக்கு வருகிறதா) நாயகிக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது. நாயகன் அம்மாவின் மீது உயிரை வைத்திருக்கிறான். அம்மாவிற்கு கட்டுப்பட்டு நடக்கிறான். பியர் குடிப்பதற்கே அம்மா அதிர்ச்சியாகும் அளவுக்கு நல்ல பையனாக இருக்கிறான். இதெல்லாம் மிஷ்கின் படத்தில் காணப்பெறாதவை.
முன்பே கூறியது போல தனது பாணியிலேயே பெண்கள் உட்பட சகலரையும் கவரும் படமெடுக்கும் லாவகம் அவருக்கு வந்து விட்டது. ஆனால் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இதில் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றும். அதற்கு காரணம், முந்தைய படங்கள் எல்லாவற்றிலும் எதிர் நாயகன் சமூகத்திற்கே ஆபத்தானவன் என்ற முறையில் நாயகனின் செயல்பாட்டில் ஒரு சமூக நோக்கம் இருக்கும். ஆனால் இந்த படம் தனி மனித பிரச்சினைகள் என்ற அளவில் முடங்கி விடுகிறது. அது தான் இந்த படத்தின் பலமும் பலவீனமும்.