Sunday, November 15, 2009

பதிவாகும் பழங்குடி வாழ்வு

பழங்குடியினருக்கு பாதுகாப்பும் அவர்களை தங்களது நிலங்களிடமிருந்து அந்நியப்படுத்தாமலிருப்பதற்கு வகை செய்யும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்தாம் பிரிவு இப்போது வெறும் முகப்பூச்சாகவே காட்சியளிக்கிறது.
-அருந்ததி ராய்

இதுகாறும் நடந்த அனைத்து இனப் போராட்டங்களிலும் அதன் நாயகர்கள் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் வீரத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் வரலாறு அவருக்கு இணையாக போராடி துயரங்கள் அனுபவித்த அவரது படைவீரர்கள் குறித்து முணுமுணுப்பது கூட இல்லை. குறிப்பாக பழங்குடியினரின் போராட்டங்கள் பதிவு செய்ய அருகதையற்றதாகவே பல வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்பட்டு வந்திருக்கின்றன. அவர்களது போராட்டங்கள் மறக்கடிக்கப்பட்டதோடு நில்லாமல் இந்தியாவை இந்தியா என்று அழைக்கும் முன்பிருந்தே அவர்கள் வாழ்ந்த நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கும் அராஜகத்தை அனைத்துக் கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன், தனது செல்வம் கொழிக்கும் செல்ல குடிமகன்களுக்காக நடத்தி வருகிறது.
இச்சூழ்நிலையில் பழங்குடி மக்களின் போராட்டங்களை முதன்மைப்ப்டுத்தியிருக்கும் பழஸ்ஸிராஜா திரைப்படம் நம் கவனத்துக்குரியதாகிறது. மம்மூட்டி, சரத்குமார் போன்ற நட்சத்திர நாயகர்கள் நடித்து ஹரிஹரன் என்ற சர்வதேச கவனத்துக்குரிய இயக்குநர் இயக்கிய.இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்கு ‘மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவான திரைப்படம்’ எனும் எதிர்பார்ப்பு மற்றும் கனிகாவின் ‘பட்ஜெட்’ உடை போஸ்கள் போன்ற மலிவான உத்திகள் பயன்படுத்தப்பட்டபோது ஹரிஹரனின் Auteur வகை இயக்குநர் பிம்பம் சற்றே அசையத் தொடங்கியது உண்மைதான். ஹரிஹரனும் தன் Auteur முகத்தை சில இடங்களில் மட்டுமே காண்பிக்கிறார். ( போர் தொடங்கியதன் குறியீடாக வெள்ளைக் குதிரை நீர்வெளியை பாய்ச்சலாக கடந்து வருவது ).
பொதுவாக மலையாள திரைப்படங்களில் Mise-en-scene குறித்து அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இத்திரைப் படத்தில் அதை மிகச் சிறப்பாக செயதிருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டு மனிதர்கள், உடைகள், கலாச்சாரம், ஆகியவற்றை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதுவும் அடர்ந்த காட்டிற்குள் நடக்கும் அந்த guerilla யுத்தக் காட்சிகள் சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சில இடங்களில் நாயகர்கள் பறந்து பறந்து சண்டையிடுவது செயற்கையாக உள்ளது. மம்மூட்டி, சரத்குமார், பத்மப்ரியா, போன்ற பிரதான நடிகர்கள் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் முக்கியமாக பத்மப்ரியாவின் நடிப்பு அபாரம். அவரது உடல்மொழி, பழங்குடிப் பெண்ணின் தமிழ் கலந்த உச்சரிப்பு , சிக்கலான முக பாவங்கள் , அவர் தேசிய விருது வாங்கும் நாள் வெகு தூரம் இல்லை என்று கட்டியம் கூறுகின்றன..ஆனால் துணை கதாபாத்திரங்கள் மலையாள வணிக சினிமாவுக்கே உரிய நாடகத்தனமான உடல்மொழியை வெளிப்படுத்துவது நெருடுகிறது.
படத்தின் மிக முக்கிய குறை மேலோட்டமான கதாபாத்திரங்கள்.மற்றும் அதனால் உண்டாகும் க்ளீஷேயான காட்சிகள். குறிப்பாக கனிகாவின் பாத்திரம். அனைத்து விடுதலைப் போராட்ட திரைப்படங்களிலும் அடித்து துவைக்கப்பட்ட பாத்திரம். மம்மூட்டி, சரத்குமார், மனோஜ்.கே.ஜெயன், கல் நெஞ்சக்கார பரங்கியர்கள், அவர்களுக்கு நடுவில் இரக்க குணம் கொண்ட ஒரு பெண் என பல பாத்திரங்கள் நமக்கு மிக பழக்கப்பட்டவையாதலால் காட்சிகள் திரையில் விரியும் முன்னே நம் மனதில் விரிந்து விடுகிறது. ஒரே விதிவிலக்கு நீலி (பத்மப்ரியா) பாத்திரம். அந்த கோபக்கார போராளிப் பெண் படம் முடிந்த பின்னும் நம்முடன் பயணிக்கிறாள். ஆனாலும் அப்பாத்திரத்தின் முடிவை காண்பிக்காதது நெருடல். இளையராஜாவின் இசையும் ,ரசூல் பூக்குட்டியின் ஒலிச்சேர்க்கையும் படத்துடன் நம்மை நெருங்க உதவுகிறது.. ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய எம்.டி.வி.யின் வசனங்கள் படத்தின் மற்றுமொரு பலம். “ வாழ்க்கை முழுக்க தொடர்ந்து வரும் நிழல் ஒரு கட்டதில் நம் எதிரே வந்து நிற்கும். அதுதான் மரணம்.” என்பது ஓர் உதாரணம். கதையின் போக்கு பல இடங்களில் ஈழ விடுதலைப் போரை நினைவு படுத்துகிறது. வழக்கம் போல் ஒரு வீரனின் கதையை எடுத்திருந்தாலும் விடுதலை போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்கு பற்றி பதிவு செய்த வகையில் இது முக்கியமான திரைப்படமாகின்றது.
அண்மையில் வெளிவந்த, பழங்குடி மக்களின் போராட்டங்களை சம கால பிண்ணனியில் பேசும் பேராண்மை திரைப்படத்தை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
இது ஒரு சாதாரண action திரைப்படம் என்றாலும் அதன் பிண்ணனியில் சொல்லப்படும் அரசியல் மிக வலுவானது. சாதி வேறுபாடு படிக்காதவர்களுக்குத்தான். படித்த அதிகாரிகள் மத்தியில் இல்லை என்று கட்டப்பட்ட பிம்பத்தை இயக்குநர் தைரியமாக உடைத்துப் போட்டிருக்கிறார். தணிக்கைக்குப் பின் (பாதி சாதி வசவுகளுக்கும் மீதி இரட்டை அர்த்தத்திற்கும்) கிடைக்கும் வசனங்கள் சாட்டையடிகள் இயற்கை வேளாண்மை , சாதிப் பிரச்சினை, பழங்குடி மக்களின் இடப்பெயர்ச்சி, அரசியல் பொருளாதாரம், ஆகியவற்றை உரத்த குரலில் அழுத்தமாக சொல்லியிருப்பதன் மூலம் தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் (அப்படி ஒன்று இருந்தால்) முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.